ஈரான் கரன்சியின் மதிப்பு 40% சரிவு: நாடு முழுவதும் போராட்டங்கள்

05/10/2012 10:10

 

தெஹ்ரான்: அணு ஆயுதம் தயாரித்து வருவதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் அந் நாட்டின் கரன்சியான ரியாலின் மதிப்பு 40 சதவீதம் சரிந்துவிட்டது.

இதையடுத்து விலைவாசி மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.

கரன்சி சரிவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்களும் வெடித்துள்ளன. அதிபர் அகமதிநிஜாத் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுவடைந்துள்ளன.

மேலும் தங்களது கரன்சியின் மதிப்பு சரிந்து வருவதால், அதை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு டாலர்களாக மாற்றி வருகின்றனர். இதனால் ஏற்கனவே தட்டுப்பாடாக உள்ள டாலருக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மிகத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்யக் கூட அரசிடம் போதிய அன்னிய செலவாணியான டாலர் இல்லாத நிலை உருவாகியுள்ளது.

இந் நிலையில் டாலர் பரிமாற்றம் செய்யும் வர்த்தகர்கள் மீது ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது.

ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதியை ஐரோப்பிய நாடுகள் நிறுத்திவிட்டன. இதனால் ஈரானின் பொருளாதாரம் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.