கடற்கரையில் வரம்பு மீறும் காதலர்களை கண்காணிக்க நவீன வாகன ரோந்து
சென்னை கடற்கரையில் வரம்பு மீறும் காதலர்களை கண்காணிக்கவும், தடையை மீறி கடலில் குளிப்போரை தடுத்து நிறுத்தவும் மணலில் விரைந்து செல்லும் நவீன வாகன ரோந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆல்டெரைன் என்று அழைக்கப்படும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள், மலைப்பகுதிகள் மற்றும் மணல் பரப்புகளிலும் வேகமாக செல்லும். நான்கு சக்கரம் கொண்ட இந்த மோட்டார் சைக்கிளை சென்னை போலீசார் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
இந்த மோட்டார் சைக்கிள் மூலம் மணிக்கு 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகம் வரை சென்று குற்றவாளிகளை பிடிக்க முடியும். இந்தியாவில் முதல் முறையாக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இந்த வாகன ரோந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
கடற்கரையில் இந்த வாகனத்தில் ரோந்து செல்லும் போலீசார், வரம்பு மீறும் காதலர்களை எச்சரிக்கை செய்து அனுப்புவர். கடற்கரையில் எச்சரிக்கையை மீறி குளிப்பவர்களை தடுத்து நிறுத்துவதோடு, கடற்கரையில் நடக்கும் திருட்டை தடுக்கவும் இந்த வாகனம் உதவும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார். மேலும் பெசன்ட் நகரைத் தொடர்ந்து மெரீனா, நீலாங்கரை கடற்கரையிலும் இதுபோன்ற வாகன ரோந்து நடைபெற உள்ளது என்றும் தெரிவித்தார். nakkheeran.in