சென்னை 2வது விமான நிலையம் அவசியம்: இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் வலியுறுத்தல்
சென்னைக்கு இன்னொரு விமான நிலையம் அமைக்க வேண்டியது மிகவும் அவசியம். இப்போதுதான் அதற்கான சரியான சமயம். எனவே ஸ்ரீபெரும்புதூரில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியி்ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தற்போது சென்னை மீனம்பாக்த்தில் உள்நாட்டு, வெளிநாட்டு, சரக்கு விமான சேவைகள் உள்ளன.
வெளிமாநிலத்ததவர்கள் சென்னைக்கு அதிக அளவில் விமானத்தில் வருகின்றனர். மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் செய்வதாலும், புதிதாக தொழில் துவங்க ஆர்வம் காட்டுவதாலும் ஏராளமான வெளிநாட்டவர்கள் சென்னைக்கு வருகின்றனர்.
இக்காரணங்களால் மீனம்பாக்கம் விமான நிலையம் போதுமானதாக இல்லை. எனவே, மக்களின் வசதிக்காக மற்றொரு விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசிடம் அறிக்கையும் சமர்பிக்கப்பட்டுள்ளது. அரசின் முடிவுக்காகவே காத்துக் கொண்டிருக்கிறோம்.
தமிழக அரசு கொடுத்துள்ள தகவலின்படி சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் புதிய விமான நிலையம் அமையலாம்.
இதற்காக அப்பகுதியில் சுமார் 4,820 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. அதை கையகப்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கக்கூடும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
oneindia.in