ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாக கையெழுத்திட வில்லை தி.மு.க எம்.பி ஹெலன் டேவிட்சன்
ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக கையெழுத்திடவில்லை என்று கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் தெரிவித்தார்.
ஸ்ரீஅனுமன் சக்தி ஜாகரன் சமிதி மாவட்ட பொறுப்பாளர்கள் கடந்த வாரத்தில் ஹெலன் டேவிட்சனை சந்தித்து மனு அளித்தனர். மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி ஸ்ரீ ராமஜென்ம பூமியை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். இப்போது நிரந்தர பூஜை நடந்துவரும் இடத்தில் கோயில் கட்டப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் ஹிந்துக்களின் சார்பில் குரல் கொடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். துணைத் தலைவர் ஸ்ரீனிவாச கண்ணன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலர் என். காளியப்பன், வித்யா பாரதி மாநிலத் தலைவர் குமாரசாமி, ஆர்.எஸ்.எஸ். மகளிர் பிரிவு நிர்வாகி பிரேமா, பி.எம்.எஸ். மாவட்ட பொதுச்செயலர் பத்மநாபபிள்ளை, இந்து முன்னணி மாவட்டத் தலைவர் செல்லன் உள்ளிட்டோர் மனு அளித்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து விஷ்வ ஹிந்து பரிஷத் நாடு முழுவதும் நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து ஹெலன் டேவிட்சன் கையெழுத்திட்டதாக செய்தி வெளியானது.
இது தொடர்பாக ஹெலன் டேவிட்சன் கூறுகையில், மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில் பலர் வந்து என்னிடம் மனு அளிக்கிறார்கள். அதுபோலவே ஸ்ரீஅனுமன் சக்தி ஜாகரன் சமிதி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதன் தலைமையில் ஒரு குழுவினர் வந்து மனு அளித்தனர்.
அந்த மனுவை பெற்றுக்கொண்டதை உறுதி செய்யும் வகையில்தான் கையெழுத்திட்டிருந்தேன்.ஆனால், அதை சிலர் திரித்துச் செய்தி வெளியிட்டுள்ளனர். ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து நான் கையெழுத்திடவில்லை. தி.மு.க தலைமைக் கழகம் அனுப்பியுள்ள தாக்கீது கிடைக்கப் பெற்றுள்ளது. இது குறித்து நாளை (இன்று) விரிவான விளக்கம் அனுப்ப உள்ளேன் என்று ஹெலன் டேவிட்சன் கூறினார்.
Webdunia.com