விக்கி லீக் வெளியிடும் புதிய ரகசிய ஆவணங்கள் - நடுங்க ஆரம்பித்துள்ளது அமெரிக்கா
அமெரிக்க, இங்கிலாந்து ராணுவத்தின் போர்க் குற்றங்கள் பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிட்ட விக்கிலீக் நிறுவனம், மேலும் பல ரகசியங்களை வெளியிட முடிவு செய்திருக்கிறது.
முன்பை விட, 7 மடங்கு அதிகமாக இருக்கும் என தெரிகிறது. அதில், வெளிநாடுகளில் அமெரிக்கா நடத்திய உளவு வேலைகள் மற்றும் தூதரக ரீதியிலான ராஜதந்திர செயல்கள் போன்ற தகவல்கள் இடம் பெறுகின்றன.
இத்தகைய தகவல்கள் வெளியானால், முன்பு அமெரிக்காவிடம் விலகி இருந்து தற்போது நெருக்கமாக இருக்கும் நாடுகளுடன் அமெரிக்காவின் உறவு பாதிக்கப்படக் கூடும். எனவே, அவை வெளியாகும் முன்பே தனது நட்பு நாடுகளை அமெரிக்கா உஷார் படுத்தி வருகிறது.
ஏற்கனவே ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை எச்சரித்தது. தற்போது இந்தியா, ரஷியா, இஸ்ரேல், துருக்கி, ஜெர்மன் போன்ற நாடுகளையும் உஷார் படுத்தியுள்ளது.
இந்த தகவலை தெரிவித்த அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் கிரவுலி, ’’விக்கி லீக் வெளியிடும் ரகசிய ஆவணங்கள் குறித்து இந்தியாவிடம் தெரிவித்துள்ளோம். அதில் என்ன இருக்கிறது என்று எங்களுக்கு தெரியாது. எனினும், அது வெளியிடப்படக் கூடாது என்பதே அமெரிக்காவின் நிலை’’ என்றார்.
இந்நிலையில், அமெரிக்க முப்படை தலைமை தளபதி முல்லர், ’அபாயகரமான ரகசியங்களை வெளியிடுவதை விக்கிலீக் நிறுத்த வேண்டும்’என வலியுறுத்தியுள்ளார். nakkheeran.in