ஹுரியத் தலைவர் மீது பா.ஜ.க.வினர் முட்டை வீச்சு
காஷ்மீர் இந்தியாவின் பகுதி அல்ல என்று மீண்டும் பேசிய ஹுரியத் அமைப்பின் தலைவர் மிர்வாய்ஸ் உமர் பரூக் மீது பாரதிய ஜனதா கட்சியின் முட்டை வீசிய நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவின் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், காஷ்மீரில் பொருளாதார வளர்ச்சியோ, நிதி ஒதுக்கீடோ முக்கிய பிரச்சனை அல்ல, விடுதலைதான் மக்களுக்கு தேவைப்படுகிறது என்று கூறினார்.
பேச்சுவார்த்தை நடத்துவதாக ஒருபுறம் கூறிக் கொண்டு மறுபக்கம் அரசு இளைஞர்களை கைது செய்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் இருக்கும் இராணுவத்தினரை மத்திய அரசு திருப்ப பெற வேண்டும் என்று மிர்வாய்ஸ் உமர் பரூக் வலியுறுத்தினார்.
மிர்வாய்ஸ் உமர் பரூக்கை தொடர்ந்து கருத்தரங்கில் பேசிய ஓய்வு பெற்ற இராணுவ தளபதி சங்கர் ராவ் செளதிரி, வங்கதேசத்தை இழந்த பாகிஸ்தான் காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தில் செயல்படுவதாக குற்றம்சாற்றியுள்ளார்.
காஷ்மீரில் அமைதியின்மையை ஏற்படுத்த பாகிஸ்தான் துடிப்பதாகவும், ஹுயத் அமைப்பு காஷ்மீர் மக்களை வன்முறை பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
கருத்தரங்களை முடித்துக் கொண்டு வெளியேற முயன்ற மிர்வாய்ஸ் உமர் பரூக்குக்கு எதிரான பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியினர் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது திடீரென அவர் மீது முட்டைகளை வீசினர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 25 க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை காவல்துறையினர் கைது செய்தனர். webdunia.com